welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Sunday 27 January 2013

விஸ்வரூப விமர்சனம்

விஸ்வரூபம் -பேஸ் புக் நண்பர் பதிவு

சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் போகிற தியேட்டர்களில் எல்லாம் சாரி சாரியாய் கார்கள். All Roads Leads to Viswaroopam என்று தான் சொல்ல வேண்டும். சினிமா பார்ப்பதற்காக இத்தனை மெனக்கெடலா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவை மூச்சாய் நேசிக்கும் ஒருவரின் படத்தை பார்க்க ஒத்த சிந்தனையுள்ள ரசிகனுக்கு இந்த மெனக்கெடல் ஒன்றும் பெரிதல்ல. இதற்கு முன் மகதீரா பார்ப்பதற்காக ஆந்திராவுக்கும், முங்காரு மலே பார்ப்பதற்காக கர்நாடகாவுக்கும் பயணப்பட்டவன் நான். அப்படி..
பயணப்பட்டு பார்க்கும் படம் சிறப்பான ஒர் அனுபவமாய் இருந்தால் எத்தனை சந்தோஷமாய் இருக்கும். அப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை விஸ்வரூபம் கொடுத்தது. இப்பட்த்திற்கான செய்த பயணம் ஒர் அனுபவம். அதை தனியே எழுத வேண்டும்.

முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார்கள். விமானம் டேக் ஆப் ஆவதைப் போல, மெல்ல வலது, இடது திரும்பி, நேராகி, லேசாய் நகர ஆரம்பித்து பின்பு தடதடவென ஒர் ஓட்டத்துடன், விர்ரென மேலெறும் போது ஒர் பதட்டப் பந்து நமக்குள் உருவாகுமே அந்த அனுபவத்தை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். பயணத்தின் போது இடையிடையே ஏறபடும் சலிப்புகளும், ஃப்ரெஷ்ஷான ஹோஸ்டஸை பார்த்ததும் கிளறி நிற்கும் சுறுசுறுப்புமாய் படம் க்ளைமாக்ஸ் வரை பயணிக்கிறது. 


கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் விதம், அவர்களின் பின்னணி, அக்கேரக்டர்களுக்கிடையே இருக்கும் உறவுகளின் நிலை என்ன என்பதை எத்தனை நாசுக்காக, சிறுசிறு வசனங்கள், காட்சிகளின் மூலமாய் வெளிப்படுத்தும் விதம், உலகத்தரம். சமகால தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே பார்த்திருக்க முடியாது. அதன் பின் வரும் தலிபான் தீவிரவாத குழுக்களின் பின்னணிக் கதை, ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்க்கையில் பின்னி பினைந்திருக்கும் தீவிரவாதம் பற்றிய காட்சிகள், இதுவரை இந்திய திரையில் சொல்லப்படாதது. 

நாட்டிய கலைஞனாய் வரும் நேரங்களில் கமலின் குரல் மற்றும் உடல் மொழியில் தெரியும் நளினம், ”உனைக் காணாத” பாடலில் அவர் காட்டும் முகபாவங்கள் வாவ்.. க்ளாஸ். முக்கியமாய் நியூயார்க் வீதிகளில் முழுக்க முழுக்க பெண்மைத்தனமில்லாமல் நளினம் கலந்த ஒர் நடை நடந்து போவார்.. வாவ்.. வாவ்.. கலைஞன். அதே போல ஒர் இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்து அல்ல ஒர் முஸ்லிம் என்று பிரகடன்ப்படுத்தி, தன் நிஜ நிலையை உணர்த்தும் காட்சி வாவ்..வாவ்..வாவ்... மக்களே தயவு செய்து அந்தக் காட்சியை உற்று கவனியுங்கள் நடிப்பிலாகட்டும், டெக்னிக்கல் ப்ரில்லியன்சிலாகட்டும் விஷூவல் ட்ரீட். என்னா ஒர் எக்சிக்யூஷன். என்னையும் அறியாமல் கை தட்டிக் கொண்டேயிருந்தேன். மொத்த தியேட்டரும் உற்சாக குரலெழுப்பியது.

ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் போன்றவர்களின் நடிப்பைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதில் ராகுல் போஸ் தனித்து தெரிகிறார். முல்லா உமர் தமிழ் பேசும் போது தான் கோவையிலும், மதுரையில் ஒரு சில வருடங்கள் இருந்ததாக சொல்லியதை பற்றி கொதித்தெழுந்தவர்கள், தெலுங்கு படத்தை பார்த்தால் புரியும் அதில் அதே கேரக்டர் ஹைதராபாத், காக்கிநாடா என்று சொல்லும். குண்டு வைப்பவன் தொழுகை செய்துவிட்டு வைக்க மாட்டான் என்கிறார்கள். அப்போது தீவிரவாதிகள் எல்லோரும் நாஸ்திகர்களா? படத்தில் காமெடி இல்லை, சண்டையில்ல, கணவன் தன் மனைவியை வேறொருவனுடன் பழக அனுப்புவது கலாச்சார சீரழிவு என்றெல்லாம் விவாதித்த ஒர் முஸ்லிம் தலைவரின் பரந்த அறிவை எண்ணி எண்ணி வியக்கிறேன். படம் நெடுக முதல் பாதி முழுவதும் வரும் புத்திசாலித்தனமான நகைச்சுவை கலந்த வசனங்களை புரிந்து கொள்ள கொஞ்சமாவது அறிவு வேண்டும். பூஜா குமாரை எப்.பி.ஐ விசாரணை செய்வார். அப்போது அவர் சொல்லும் ஆங்கில வசனத்திற்கு ஆந்திராவில் உள்ள சி செண்டர் தியேட்டரில் ஒரே அப்ளாஸ். 

ஆப்கானின் லேண்ட்ஸ்கேப்புகளை கவர் செய்ததிலிருந்து, ஆக்‌ஷன் காட்சிகளில் கேரக்டர்களுடனே பயணிக்கும் போதாகட்டும் நியூயார்க் நகர வீதிகளில் நடக்கும் சேஸாகட்டும் ஒளிப்பவதிவாளர் ஷானு வர்கீஸ் கலக்கியெடுத்திருக்கிறார். இவர் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம், ஆர்ட் டைரக்டர் லால்குடி இளையரஜா. வாவ்.. வாவ்.. ஆப்கானிய குகை போன்ற வீடுகளையும், சண்டைக்காட்சிகள் நடக்கும் தத்ரூப உடல்களை, கண் முன்னே நிஜமாய் உலவவிடுகிறார். கமல் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்து சண்டைக்காட்சி ஒன்றே போது எடிட்டர் மகேஷுன் திறமைக்கு. சுற்றிப் போட வேண்டும்.

நான் லீனியர் திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள், ஸ்லீக்கான எக்ஸலெண்ட் மேக்கிங், புத்திசாலித்தனமான நக்கல் நைய்யாண்டி வசனங்கள், அருமையான நடிப்பு, குவாலிட்டியான தயாரிப்பு, எல்லாவற்றையும் விட நடிகர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர் கமலை விட இயக்குனர் கமல் தான் டாமினேட் செய்திருக்கிறார். அவ்வளவு நேர்த்தி. ஒர் திரைக்கதையாசிரியராய் கதை சொல்ல வேண்டிய இடங்களில் ஆங்காங்கே சுவாரஸ்யம் குறைந்தாலும், திடும் திடுமென கிளம்பும் பதட்ட நிமிடங்களில் மீண்டும் சீட்டு நுனிக்கு கொண்டு வர தவறவில்லை இயக்குனர். தங்களுக்குள் உளவாளி என்று கண்டறியப்பட்ட ஒருவனை பத்து பேர் சேர்ந்து காலால் மிதித்து அடித்து, தூக்கிலிட முனையும் காட்சியில் மக்கள் கூடும் இடத்தில் அவன் அழ, அழ, கருப்புத்துணியால் முகம் மூடப்பட, அவனது தந்தை இங்கு நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்க முடியாமல் தலைகுனிந்து அழுது கொண்டிருக்க, இன்னொரு பக்கம், அவனது தாய் கண்ணிர் பெருக்கோட, அழுதபடி இறைஞ்ச, மக்கள் குழுவினரின் துப்பாக்கி வெடிச்சத்தத்தோடு அவன் தூக்கிலிடப் பட்டு, அவன் இறந்துவிட்டனா என்று அவனின் கால் நாடித்துடிப்பைப் பார்த்து அறிவித்து முடிந்ததும், ஒர் மாஸ்டர் ஷாட்டில் அது வரை கூட்டத்தின் பின்னணியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள், சரி முடிந்துவிட்டது என்று விளையாடப் போகும் காட்சி.. அப்பப்பா..

முக்கியமாய் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஆடியோ. சாதாரண டி.டி.எஸ்ஸிலேயே கலக்கி எடுத்திருக்கும் ஒலியை அனுபவத்தை சத்யம் போன்ற தியேட்டர்களில் ஆரோ 3டியுடன் பார்த்தால் ஆகச் சிறந்த அனுபவமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

இப்படத்தை தடை செய்ய என்ன இருக்கிறது?. எந்த இடத்தில் இந்திய அல்லது தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்கும் இடம் ஒன்று கூட இருப்பதாய் தெரியவில்லை. இப்படம் முழுக்க, முழுக்க, ஆப்கானிஸ்தான், அமெரிக்கர்களுக்கிடையே நடக்கும் கதை. அவர்களூடே ஸ்பை வேலை செய்யும் ஒருவனின் பார்வையில் நடக்கும் கதை. சொல்லப்போனால் இப்படத்த்தில் விடப்பட்டிருக்கும் பல விஷயங்களுக்கான பதில் இரண்டாம் பாகமாய் வரப்போகும் படத்தில் தான் முடியும் என்று தெரிகிறது. 

இந்தப்படத்தை பார்க்க கொஞ்சம் உலக ஞானம் வேண்டும் என்று ஒரு முறை கமல் சொல்லியிருந்தார். அது என்னவோ உண்மைதான் ஆர்கோ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு தமிழில் இந்த மாதிரி படமெல்லாம் எப்போ வருமோ? என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த விஸ்வரூபம் ஒர் பதில். அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களூடே ஊழன்று கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்னும் ஒர் படமே. புத்திசாலித்தனமான சிறந்த சினிமா அனுபவத்தை பெற விரும்பும் தமிழ், தெலுங்கு, இந்தி ரசிகர்களுக்கு இப்படம் ஒர் பேரனுபவம். டோண்ட் மிஸ்.
கேபிள் சங்கர்

டிஸ்கி: இப்படத்தை கமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எடுத்திருக்கலாம். இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நண்பர்கள் படம் பார்த்துவிட்டு போராடவும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF